திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி பி.சி.காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 49).இவரது வீட்டிற்கு அருகில் அவரது சித்தி செல்லம்மாள்(வயது 75) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்லம்மாளை பார்ப்பதற்காக அவரது உறவினர் மாகாளிபட்டியை சேர்ந்த செல்வராஜ்(வயது 46) என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 18ம் தேதி அதிகாலை வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்பது போல் இருந்துள்ளது.
உடனே செல்லம்மாள் எழுந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்து செல்வராஜ் வெளியே ஓடுவது தெரிந்து சத்தம் போட்டுள்ளார். அதற்குள் செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த செல்லம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பர்சில் வைத்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து செல்லம்மாள் தனது அக்காள் மகன் தங்கராசிடம் கூறியுள்ளார்.
உடனே தங்கராசு தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாகாளிபட்டியை சேர்ந்த செல்வராஜை பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 5 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.