பா.ம.க.வினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் பிரின்ஸ் தலைமையிலான நிர்வாகிகள் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். பிரின்ஸ் பெயரிலான அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பாட்டாளி மக்கள் கட்சியில் 20 ஆண்டுகளாக வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறேன். இந்த நிலையில் சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியான ஜெய்பீம் படத்தை நான் பார்த்தேன். அந்த படத்தை பார்த்த பின்பு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
உண்மை சம்பவம் எனக்கூறி வன்னியர் சமுதாயத்தின் அடையாளத்தையும், எங்கள் சமூதாய தலைவரையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. உண்மை சம்பவத்தில் அந்தோணி சாமி என்பவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்துள்ளார். ஆனால், அந்தோணி சாமி முதலியாரை குரு என்று எங்கள் சமுதாயத்தின் மறைந்த மாவீரன் குரு-வின் பெயரை பயன்படுத்தியும், வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை கொண்ட வன்னியர் சங்க காலண்டரை திட்டமிட்டு பயன்படுத்தி அவமதித்து உள்ளார்கள்.
இதுபோன்று சித்தரித்து ஜாதி மோதல்களை உருவாக்கும் வண்ணம் படம் எடுத்துள்ள அந்தப் படத்தின் இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.