திருச்சி மாநகரத்தில் கடந்த 13-ந் தேதி அதிகாலை காந்திமார்க்கெட் ராமகிருஷ்ணா பாலம் அருகே மாநகராட்சி கழிவறைக்கு சென்ற நிஷாந்த்(21) என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சில நாட்களில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் சின்ராசு என்பவர் கொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த இரு கொலை சம்பவங்கள் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் மாநகரில் உள்ள ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைதாகி தற்போது ஜாமீனில் சுற்றி திரிபவர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
கமிஷனரின் உத்தரவை தொடர்ந்து, மாநகரில் உள்ள 14 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் ஒரேநாளில் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 2-வது நாளாகவும் ரவுடிகள் மீதான போலீசாரின் அதிரடி வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. இதில் 2-வது நாளான நேற்று 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகரில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸ் கமிஷனர் அருண் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.