திருச்சி மாவட்ட விதைகள் பரிசோதனை அலுவலர் மனோன்மணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது பருவமழை பெய்து வருவதால், விதைகளை சரியான ஈரப்பதத்தில் சேமித்து வைக்க வேண்டும். மேலும் தரமான விதைகள் என்பது நல்ல முளைப்புத்திறன் உள்ளதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பிற ரககலப்பு இல்லாமலும், சரியான ஈரப்பதம் உள்ள விதைகளாகவும், மண்கட்டிகள் மற்றும் பதர் இல்லாத விதைகளாகவும் இருக்க வேண்டும். விதைகளை சரியான ஈரப்பதத்தில் சேமித்து வைக்கும் போது விதையின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம்.
மேலும் சேமித்து வைக்கும் காலத்தில் பூச்சி மற்றும் பூஞ்சான நோய் தாக்குதலில் இருந்து விதையை பாதுகாக்கலாம். தரமான விதைகளை பயன்படுத்தும் போது விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு நல்ல வீரியமான நாற்றுகளும், போதிய பயிர் எண்ணிக்கையும் பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் பெறலாம்.
எனவே விதைகளை சேமிக்கும் போது சரியான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். எனவே விவசாயிகள் தங்களிடம் உள்ள விதையின் ஈரப்பதத்தை அறிய திருச்சி காஜாமலைக் காலனியில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி, பரிசோதனை கட்டணமாக ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 மட்டுமே செலுத்தி பரிசோதனை விவரங்களை பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்