சிவகங்கை மாவட்டம் குந்தகை என்ற 29 வயது பெண், தனது கணவருடன் திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா அருகே உள்ள கண்ணப்பா ஹோட்டலில் நடக்கும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்பெண், சிவகங்கையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அப்போது, பஸ்சில் பேராசிரியை இருக்கையின் பின்புறம் அமர்ந்திருந்த போதை வாலிபர் ஒருவர், பேராசிரியையின் கன்னத்தைக் கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதைப் பார்த்த அவரது கணவர், அந்த வாலிபரை எச்சரித்தார். இந்த நிலையில் திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா அருகே பஸ் வந்ததும், கணவன்-மனைவி இருவரும் இறங்கினர். அப்போது போதை ஆசாமியும் இறங்கினார். அவர், அவதூறான வார்த்தைகளால் பேசி கையில் வைத்திருந்த கத்தியால் பேராசிரியையின் கணவரை கையில் குத்தி கிழித்து விட்டு தப்பி ஓட முயன்றார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், மதுபோதையில் இருந்த வாலிபர் பெயர் சூரியகுமார்(29) என்பதும், சோமரசம் பேட்டை அருகே உள்ள அல்லித்துறை வளையல்கார தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் என்பதும் தெரிந்தது.சூரியகுமாரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.