இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசித்தேரோட்டம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டுக்கான மாசித் தேரோட்டம் விழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து மாசி தேரோட்டத் திருவிழா கடந்த 21ம் தேதி முதல் தொடங்கியது. இதில் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்நிலையில் முக்கிய நிகழ்வான மாசித் தேரோட்டம் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மன் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகாதீபாதரனை காட்டப்பட்டு அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தனர்.